உருவாகிறது ரஜினிகாந்த் பயோபிக்... தனுஷின் ஆசை நிறைவேறுமா?


தனுஷ்- ரஜினி

நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக் படத்திற்கான உரிமத்தை பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா பெற்றுள்ளார். இந்தத் தகவல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனுஷ் ஆசைப்பட்டபடி ரஜினியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். இதுகுறித்தான அறிவிப்பையும் வெளியிட்டனர். நீண்ட நாள் கழித்து ரஜினி பாலிவுட்டில் படம் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்தப் படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்குவார் எனவும் தகவல் வெளியானது.

ரஜினி- சஜித்

ஆனால், இப்போது அது ரஜினிகாந்தின் பயோபிக் என்று சொல்லப்படுகிறது. இதற்கான உரிமத்தைத்தான் சஜித் நதியத்வாலா பெற்றிருக்கிறார். சஜித் நதியத்வாலா நடிகராக மட்டுமல்லாது ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர் என்பது அவரது நெருக்கமான வட்டாரத்தினர் அறிவார்கள். பேருந்து நடத்துநர் முதல் சூப்பர் ஸ்டார் வரை ரஜினிகாந்தின் கதை உலகம் பார்க்கத் தகுதியானது என்று சஜித் நம்புகிறார்.

கடந்த சில மாதங்களாக திரைக்கதைக்காக ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தின்ருடன் சஜித் நெருங்கிப் பழகி வருகிறார். அடிமட்டத்தில் இருந்த ஒருவர் எப்படி சூப்பர் ஸ்டாராக மாறினார் என்பதையும் தாண்டி அவர் எந்த அளவுக்கு நல்ல மனிதர் என்பதில் தான் திரைக்கதை அதிகம் கவனம் செலுத்தும் என்கிறது சஜித் வட்டாரம்.

நடிகர் ரஜினிகாந்த்

முன்னதாக ரஜினிகாந்தின் பயோபிக்கில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், ரஜினி மகள் ஐஸ்வர்யாவுடன் ஏற்பட்ட பிரிவு காரணமாக அது நடக்காமல் போனது.

இப்போது உருவாக இருக்கும் ரஜினிகாந்த் பயோபிக்கில் ரஜினிகாந்தே நடிப்பாரா, ’இளையராஜா’ பயோபிக்கில் நடித்து வரும் தனுஷூக்கு ரஜினியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபடி வாய்ப்பு கிட்டுமா அல்லது வேறு நடிகர்கள் வர வாய்ப்புள்ளதா என்பது உள்ளிட்ட தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும்.

x