நடிகர் மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!


மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலி கானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம், அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

த்ரிஷா, மன்சூர் அலிகான்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர, நடிகை த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

நடிகை குஷ்பு

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை த்ரிஷா தரப்பில், மூன்று பேருக்கும் எதிராக ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மன்சூர் அலிகான், குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் என்றும், தனது கருத்து எதிர்ப்பு கருத்து தான் என்றும் வாதிடப்பட்டது.

மன்சூர் அலிகான் தரப்பில், மூன்று பேருக்கு எதிராகவும் ஒரே வழக்காக தாக்கல் செய்ய முடியும் என்றும், தான் பேசிய வீடியோவை தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, மூவரும் எக்ஸ் வலைதளத்தில் தங்கள் கருத்தை பதிவை செய்திருப்பதாகவும், இதை அவதூறாக கருத முடியாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

மன்சூர் அலிகான், த்ரிஷா

பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும்போது அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பது மனித இயல்பு. இதே விவகாத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பும் கோரியுள்ளார். உரிமையியல் நடைமுறை சட்டப்படி மூன்று பேருக்கும் எதிராக ஒரே நேரத்தில் வழக்கு தொடர முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமென மன்சூர் அலிகானுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!

x