கேப்டன் மக்களின் சொத்து: யாரிடமும் காப்புரிமை கேட்க மாட்டோம் - பிரேமலதா விஜயகாந்த்


கேப்டன் விஜயகாந்த் எங்களின் சொத்தல்ல, மக்களின் சொத்து. அவரது பாடல்களையோ, போஸ்டரையோ படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்க மாட்டேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் ‘பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினர் பிரேமலதாவை நேரில் சந்தித்தனர்.

பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடலும் நேற்று நடந்தது. இதன்பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிரேமலதா, “’லப்பர் பந்து’ படம் கேப்டனுக்காக அர்ப்பணித்திருக்கிறோம் என இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் எங்களிடம் வந்து சொன்னார்கள். மேலும், படம் பார்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்கள். குடும்பத்தோடு பார்த்தோம். படம் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும், பாடல்களிலும் கேப்டனுடைய தாக்கம் தெரிகிறது. கேப்டனை கொண்டாடி இருக்கிறார்கள்.

’பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் கேப்டனைக் கொண்டாடி பிரச்சாரக் கூட்டம், கட்சிக் கூட்டம் என எங்கும் ஒலித்தப் பாடல். எங்கள் கட்சியின் மிக முக்கியமான பாடல் இது. அதை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜயகாந்தைப் பயன்படுத்திய அளவிற்குக் கூட 'GOAT' படத்தில் கேப்டனை பெரிதாகப் பயன்படுத்தவில்லை என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம். இதுமட்டுமல்லாது, கேப்டனின் ‘ராஜதுரை’ படத்தின் கதையைப் போலவே இந்தப் படம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். படம் வெளிவந்து விட்டது. இனிமேல் 'GOAT' படம் பற்றி கருத்து சொல்ல எதுவும் இல்லை. அதுவும் நல்ல படம் தான்” என்றார்.

’லப்பர் பந்து’ படத்தில் கேப்டன் பாடலை பயன்படுத்தியதற்கு காப்புரிமை கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “திரைப்படங்களில் கேப்டனின் பாடலை, போஸ்டர்களைப் பயன்படுத்தினால் காப்புரிமை யாரிடமும் கேட்க மாட்டோம். கேப்டன் எங்கள் குடும்ப சொத்தல்ல, தமிழக மக்களின் சொத்து” என்றார்.

x