நடிகை பாலியல் புகாரில் மலையாள நடிகர் எடவெலா பாபு கைது!


ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் நாளுக்கு நாள் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகை கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் மலையாள நடிகர் சங்க முன்னாள் செயலாளரும், நடிகருமான எடவெலா பாபுவை இன்று போலீஸார் கைது செய்தனர்.

கேரள திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாலியல் ரீதியாக அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை கிளப்பிய நிலையில், பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களது பெயர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து சர்ச்சைகளைக் கிளப்பியது.

மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாது தெலுங்கு, தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் சினிமாத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய இதுபோன்ற கமிட்டி அமைக்க கோரிக்கை நடிகைகளிடையே எதிரொலித்தது.

இந்த நிலையில், மலையாள நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர் எடவெலா பாபு கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்மா’ சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பத்தை நிரப்புவதற்காக ப எடவெலா பாபுவின் கல்லூர் வீட்டுக்கு சென்றபோது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நடிகை புகாரில் தெரிவித்துள்ளார்.

எர்ணாகுளம் டவுன் நார்த் காவல்நிலையத்தில் நடிகை கொடுத்த இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். மூன்று மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல்துறையினர் அவரை எர்ணாகுளம் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கனவே எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால் மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

x