எல்லா ஊரிலும் இசை நிகழ்ச்சி: இளையராஜா வெளியிட்ட அறிவிப்பு!


சென்னை: தலைநகரில் மட்டுமல்லாது இனி அனைத்து ஊர்களிலும் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. காவிரி டெல்டா பகுதியில் நடைபெறும் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பதற்காக ரசிகர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே மிதமான மழையும் இருந்தது. இதனால், நிகழ்ச்சி தொடங்க காலதாமதமானது. காலதாமதத்திற்குப் பிறகு நிகழ்ச்சி தொடங்கியதும் மழை பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் ராஜாவின் இசை நிகழ்ச்சியைப் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியைப் பார்த்த காணொலிகளும் இணையத்தில் வைரலாகின.

இதனைக் குறிப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும்’ எனக் கூறியிருக்கிறார்.

x