மு.மேத்தா, பி. சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது அறிவிப்பு!


கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் மு.மேத்தாவுக்கும், பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கும் கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிடும் சாதனையாளர்களைப் போற்றி பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் ’கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்’ விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்ச ரூபாய் ரொக்கமும், நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பின்னணிப் பாடகி பி. சுசீலா மற்றும் கவிஞர் மு. மேத்தா ஆகியோருக்கு ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதி’னை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதாளர்களைத் தேர்வு செய்வதற்காக மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தலைமையில் நடிகர் நாசர், இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

சாகித்ய அகாடெமி விருது பெற்றவர், புதுக்கவிதையில் ஏற்றம் தந்தவர் உள்ளிட்ட காரணங்களுக்காக மு. மேத்தாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பன்மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 30ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை” முதல்வர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

x