வேள்பாரி நாவலை தழுவி காட்சிகள்: இயக்குநர் ஷங்கர் எச்சரிக்கை


இயக்குநர் ஷங்கர், இந்தியன் 3, கேம்சேஞ்சர் படங்களுக்குப் பிறகு சு.வெங்கடேசன் எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை படமாக்க இருக்கிறார். அதை 3 பாகமாக உருவாக்க இருப்பதாகவும் அதற்கான திரைக்கதை எழுதிவிட்டதாகவும் பேட்டிகளில் ஏற்கெனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த நாவலின் காட்சிகளை அப்படியே தழுவி ஒரு படத்தில் பயன்படுத்தியுள்ளதாக ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சு.வெங்கடேசன் எழுதி புகழ்பெற்ற நவயுக நாயகன் வேள்பாரி சரித்திர நாவலுக்கான காப்புரிமை என்னிடம் உள்ளது. நாவலில் உள்ள சில முக்கிய காட்சிகள், சமீபகாலமாக சில திரைப்படங்களில் எந்த அனுமதியும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனையை தருகிறது. அதிலும் நாவலில் உள்ள மிக முக்கியமான காட்சி ஒன்றை சமீபத்தில் வெளியான திரைப்பட டிரெய்லரில் பயன்படுத்தியிருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

அந்த நாவலில் உள்ள காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். படைப்பாளிகளுக்கு மதிப்பளியுங்கள். மீறி நாவலில் இருந்து காட்சிகளை எடுத்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். ஷங்கர் குறிப்பிட்ட அந்த டிரெய்லர், சூர்யாவின் கங்குவா படமா? தேவரா படமா என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

x