உதயநிதி துணைமுதல்வர்: செய்தியாளரிடம் கோபப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!


அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆகப் போகிறார் என்ற பேச்சு கிளம்பியுள்ள நிலையில் இது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கோபப்பட்டுள்ளார்.

விஜயவாடாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை நடைபெற இருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்தார்.

மஞ்சு வாரியர், அனிருத், துஷாரா விஜயன் உள்ளிட்டப் படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. சென்னை விமான நிலையத்தில் ’வேட்டையன்’ பாடல் வெளியீட்டு விழாவில் யார் எல்லாம் பங்கேற்கிறார் என ரஜினியிடம் கேள்வி எழுப்பியதற்கு அது பற்றி தனக்குத் தெரியாது என்றார்.

மேலும், ’அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவாரா?’ எனக் கேட்டதற்கு கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமாக கைநீட்டி, “அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று சொல்லி உள்ளேன்” என்றார். மேலும் ’வேட்டையன்’ மற்றும் ‘கூலி’ படங்கள் இரண்டும் நன்றாக வந்திருப்பதாகவும் தெரிவித்து விட்டு காரில் ஏறி புறப்பட்டார்.

x