புதிய இந்தியாவின் தொடக்கம் ஹேமா கமிட்டி; பாடலாசிரியர் வைரமுத்து!


சென்னை: புதிய இந்தியாவின் தொடக்கமாக ஹேமா கமிட்டியைப் பார்ப்பதாக கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி சென்னை தி. நகரில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து நேரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, ”சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை இயக்கத்தின் போர் சிங்கம். அவரது மறைவு என்பது ஒரு கட்சிக்கான இழப்பு அல்ல. தேசத்துக்கான இழப்பு. ஒரு கட்சிக்காக மட்டும் போராடுகிறவன் அரசியல்வாதி என்று அறியப்படுகிறான். தேசத்திற்காக போராடியவன் தேசியவாதி என அறியப்படுகிறான். அவருடைய இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதல்ல. அவரது இடத்தை நூறு அறிவு ஜீவிகள் நிரப்ப வேண்டும் என்பது என்னை போன்றவர்களின் எண்ணம். மாணவர் முதல் மரணப்படுக்கை வரை தன் வாழ்வை இயக்கத்திற்கும் நாட்டுக்கும் அர்ப்பணித்து சென்ற ஒரு மாபெரும் தலைவர் சீதாராம் யெச்சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்” என்றார்.

அன்னபூர்ணா சீனிவாசன் விவகாரத்திற்கு பதிலளித்த வைரமுத்து, ”குறை கேட்பு நிகழ்ச்சிகளை சொல்லத்தான் அழைக்கப்படுகிறார்கள். குறைகளை சொல்வது தப்பில்லையே, குறைகளை சொல்வது என்பது ஒரு குடிமக்களின் உரிமை தானே, கேட்டுக் கொள்வது ஆளும் தரப்பின் கடமை தானே. உரிமை கேட்டவனுக்கு இருக்கிறது. கடமை ஆள்கிறவனுக்கு இருக்கிறது. அந்த கேள்விகளில் எனக்கு ஒன்றும் தவறாக தோன்றவில்லை. இயல்பாக அந்த நபரை நான் அறிவேன். என்னோடு பல ஆண்டுகள் பயணித்தவர். இயல்பாகவே அவர் நகைச்சுவையாக பேசுவார். அந்த நகைச்சுவையோடு தன்னுடைய கேள்வியும் கேட்டு இருக்கிறார். மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதா இல்லை இவராக சென்று கேட்டாரா? மன்னிப்பு தானா என்று முழுமையாக தெரியாமல் இது குறித்து கருத்து கூறுவது ஆகாது” என்றார்.

ஹேமா கமிட்டி குறித்து பேசிய வைரமுத்து, ”ஹேமா கமிட்டி என்பது எல்லா மாநிலங்களிலும் முக்கியமாக எல்லாத் துறைகளிலும் முக்கியமாக அமைக்கப்பட வேண்டிய அமைப்பு. திரைத் துறையில் மட்டுமல்ல நாட்டின் எல்லாத் துறைகளிலும் பெண்கள் பாதுகாப்பை நாடுகிறார்கள். பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவற்றிலிருந்து முற்றும் விடுபட வேண்டும் என்றால் பெண்மையில் இருக்கிற பெண்மை என்ற ஒரு கருத்தை நீக்கிவிட வேண்டும்.

ஆணுக்கு ஆண்மை என இருப்பதும் பெண்ணுக்கு பெண்மை என பிரிக்கப்படுவதும் நாட்டில் வேதங்களை ஏற்படுத்துகிற மதிப்பீடுகள். ஆணும் பெண்ணும் சரி சமம் தான் இதில் யாரும் யாரையும் சீண்டுவது என்பது ஒரு பாலினம் பலவீனமானது என்பதை காட்டுவதாக உள்ளது .பெண்ணினம் பலவீனமான பாலினம் அல்ல. இந்திய பள்ளி கல்வித்துறை பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பயிற்சியை கல்வித் திட்டத்தின் சேர்க்க வேண்டும். பெண்களுக்கு விளையாட்டு, எழுத்து பயிற்சி மட்டும் போதாது. உன் குழந்தைகளுக்கு தாங்கள் தங்களையே காத்துக் கொள்கிற உடல் வலிமையை ஊட்டம் செய்ய வேண்டும். ஒரு புதிய இந்தியாவை எழுதுவதற்கான தொடக்கமாகத்தான் ஹேமா கமிட்டியை பார்க்கிறேன்” என்றார்.

x