இயக்குநர் மீது பாலியல் புகார்: பரபரப்பை கிளப்பிய நடிகை லேகா வாஷிங்டன்!


சென்னை: பிரபல இயக்குநர் மீது நடிகை லேகா வாஷிங்டன் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார்.

மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. சினிமாவில் பணிபுரியும் பல பெண்களும் நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். இந்தப் புகாரில் பல முன்னணி நடிகர்களே சிக்கியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மலையாளத் திரையுலகை அடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் இந்த விஷயம் பூதாகரமானது.

சினிமாவில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கங்களும் உறுதியளித்துள்ளன. இந்த நிலையில் இயக்குநர் ஒருவர் மீது நடிகை லேகா வாஷிங்டன் புகார் கொடுத்துள்ளார். தமிழில் ‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘கல்யாண சமையல் சாதம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை லேகா வாஷிங்கடன். சமீபத்திய பேட்டியில், “சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த எனக்கு பிரபல இயக்குநர் ஒருவர் பெரிய வாய்ப்பு கொடுத்தார். பதிலுக்கு என்ன கிடைக்கும் எனக் கேட்டார். நான் ‘நல்ல நடிகை’ என பதில் கொடுத்தேன். ஆனால், அவர் அதை எதிர்பார்க்கவில்லை’ என்பது பிறகுதான் எனக்குப் புரிந்தது. அவருக்கு நான் சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் தேவையில்லாத ’அதுபோன்ற’ மாத்திரைகள் எடுத்ததால் மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். இதுதான் கர்மா” எனக் கூறியுள்ளார்.

x