நடிகை வனிதா மீது தாக்குதல்... முகத்தில் காயத்துடன் புகைப்படம்; பரபரப்பு குற்றச்சாட்டு!


முகத்தில் காயத்துடன் வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் விவகாரத்தில் தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் நடிகை வனிதா, முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படம் பதிவிட்டு பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 07 தமிழ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்த பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அவரின் மீது வீட்டில் இருந்த பெண்கள் சில சர்ச்சை புகார்களை முன்வைத்ததை தொடர்ந்து, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பிரதீப்பின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்து இருந்தது.

இந்நிலையில், பிக் பாசில் நடப்பு சீசனில் கலந்துகொண்டுள்ள நடிகை வனிதாவின் மகள் ஜீவிகா மற்றும் அவரின் நண்பர்கள் குழுவாக சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றியதாக பேசப்பட்டது. இதனால் ஆத்திரத்தில் இருந்த நடிகர் பிரதீப்பின் ஆதரவாளர் ஒருவர் நடிகை வனிதாவை தாக்கியுள்ளார் என்று கூறப்படுகின்றது.

பிரதீப்

தன்னை பிரதீப்பின் ஆதரவாளர் தாக்கிவிட்டதாக வனிதா விஜயகுமார் புகைப்படத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். முகத்தில் காயமடைந்து மருந்து தேய்த்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ள வனிதா இதுகுறித்து தெரிவித்து உள்ளதாவது, "பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளரால் கொடூரமாக தாக்கப்பட்டேன். யாரென்று கடவுளுக்கே தெரியும்.

பிக்பாஸ் 7 வது சீசன் விமர்சனத்தை முடித்து இரவு சாப்பிட்டுவிட்டு, எனது சகோதரி சவுமியா வீட்டில் நிறுத்தி இருந்த என்னுடைய காரை எடுக்க சென்றேன். அப்போது இருட்டில் ஒருவர் என் முன் தோன்றி, "ரெட் கார்ட் கொடுக்குறீங்களா? அதுக்கு நீ ஆதரவா" என்று கூறி தாக்கி சென்றுவிட்டார்.எனது முகத்தில் ரத்தம் வழிந்தோடியது. கடுமையான வலியாக உள்ளது.

முகம் வீக்கமடைந்து இருக்கிறது. நள்ளிரவு 1 மணி என்பதால் யாரும் அங்கு இல்லை. என்னுடைய சகோதரியை நான் அழைத்தேன். அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்க என்னை அழைத்தார். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டேன். முதலுதவி பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். தாக்கியது யார் என்று தெரியவில்லை. என் காதுகளை துளைக்கும் அளவுக்கு பைத்தியம்போல் சிரித்தான்.

அனைத்தில் இருந்து ப்ரேக் எடுக்க விரும்புகிறேன். உடல் ரீதியாக திரையில் தோன்றும் வகையில் நான் இல்லை. இடையூறு செய்பவர்களை ஆதரிப்பவர்களுக்கு, ஆபத்து ஒரு அடி தூரத்தில்தான் உள்ளது. என் மீதான தாக்குதலை தைரியமாக பதிவு செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

x