15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த வடிவேலு - சுந்தர்.சி கூட்டணி!


இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகர் வடிவேலு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள்.

இயக்குநர் சுந்தர். சி மற்றும் நடிகர் வடிவேலு காம்பினேஷனில் வெளியான ‘வின்னர்’, ‘தலைநகரம்’ உள்ளிட்டப் பல படங்கள் ஹிட் ஆகியிருக்கிறது. இதில் வடிவேலுவின் நகைச்சுவையும் அவரது கதாபாத்திர பெயர்களும் எப்போது பார்த்தாலும் சலிப்பு ஏற்படுத்தாத வகையில் ரசிக்கக் கூடியவை. இந்த ஹிட் காம்போ 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ‘கேங்கர்ஸ்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை நடிகை குஷ்பு தயாரிக்க, சுந்தர். சி இயக்கி, நடித்திருக்கிறார். சிங்காரம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்திருக்கிறார். ’கைப்புள்ள’, ‘வீரபாகு’ போன்ற வடிவேலுவின் கதாபாத்திரங்களைப் போல, ‘கேங்கர்ஸ்’ சிங்காரம் கதாபாத்திரமும் வடிவேலுக்கு நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுந்தர். சி.

கேத்ரீன் தெரசா, முனீஷ்காந்த், மைம் கோபி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து படத்தை வெளியிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார் சுந்தர். சி.

x