பாலிவுட் நடிகை மலைகா அரோரா தந்தை தற்கொலை: ஆறாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு


மும்பை: பிரபல பாலிவுட் நடிகை மலைகா அரோராவின் தந்தை ஆறாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார்.

'பிரேம் கா கேம்’, ‘தபாங்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்தவர் மலைகா அரோரா. தமிழ் ரசிகர்களுக்கு ‘உயிரே’ படத்தில் ‘தய்யா தய்யா’ பாடல் மூலம் பரிச்சியமானவர். 50 வயதான மலைகா அரோரா தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரை டேட் செய்து வந்தார். இருவரும் சமீபத்தில் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பான பிரச்சினைகளும் கடந்த சில வருடங்களாகவே அவர்களது குடும்பத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மலைகாவின் தந்தை அனில் அரோரா இன்று காலை 9 மணியளவில் வீட்டின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருக்கிறார். அந்த சமயத்தில், மலைகா மும்பையில் இருந்து புனேவுக்கு சென்றிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அனில் அரோரா உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டிருக்கிறார்.

தகவல் அறிந்த போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் அறிந்த மலைகாவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், சல்மான் கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் அஞ்சலி செலுத்த நேரில் வந்துள்ளனர்.

x