குடிபோதையில் அடிதடியில் ஈடுபட்ட பாடகர் மனோ மகன்: போலீஸார் விசாரணை!


சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ரஃபி மனோ போதையில் தகராறு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களைப் பாடியவர் மனோ. இவருடைய மகன் ரஃபி மனோ மதுபோதையில் இளைஞர்களிடம் தகராறு செய்திருப்பதாக காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளன. அதாவது சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன் (20) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மதுரவாயலை சேர்ந்த ஐடிஐ மாணவர் நிதிஷ் (16). இவர்கள் இருவரும் நேற்று இரவு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகில் உள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு வாங்கச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்திருக்கின்றனர்.

இதுமட்டுமல்லாது, அவர்களை அடிக்கவும் செய்திருக்கின்றனர். இதில் கிருபாகரன் பின்னந்தலையில் அடிபட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். தாக்கிய ஐந்து பேர் பற்றிய விவரங்களை காவல்துறையினர் சேகரித்தபோது, அதில் பாடகர் மனோவின் மகன் ரஃபியும் இருக்கிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் ஐவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x