கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர் பாலகிருஷ்ணா மகன்!


ஹைதராபாத்: தெலுங்கின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதன் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

’ஹனுமான்’ படப்புகழ் இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில், பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் நந்தமுரி மோக்ஷக்ஞ்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ’ஹனுமான்’ சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இந்தப் படம் உருவாகிறது. நமது புராணங்களில் வரும், ஒரு பழங்கால புராணக்கருவை மையமாக வைத்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படம், மோக்ஷக்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஒரு சமூக-ஃபேண்டஸி படத்தில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் இணைந்து, மோக்ஷக்யாவின் திரை அறிமுகத்தை நிகழ்த்துவது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என நடிகர் பாலகிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா கூறியதாவது, “மோக்ஷக்ஞ்யாவை சினிமாவில் அறிமுகப்படுத்துவது, மிகப்பெரிய கவுரவம் மற்றும் மிகப்பெரிய பொறுப்பு. என் மீதும் என் கதை மீதும் பாலகிருஷ்ணா வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த ஸ்கிரிப்ட் நமது இதிகாசத்திலிருந்து ஈர்க்கப்பட்ட கருவைக்கொண்டு உருவாக்கப்பட்டது, இதிகாசம் சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகளின் தங்கச் சுரங்கமாகும். இது என் சினிமா யுனிவர்ஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.

x