நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு: இயக்குநர்கள் மறுப்பு!


நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் குற்றம் சாட்டபட்ட நாளில் நிவின் பாலி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

இயக்குநர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடைபெற்ற படப்பிடிப்பில் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி காலை வரை படப்பிடிப்பில் நிவின் பாலி கலந்து கொண்டார் என்றும், பின்னர் கொச்சியில் இயக்குநர் அருண் இயக்கத்தில் நடந்த 'பார்மா' எனும் இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், 'அந்த தேதியில் துபாயில் நடிகர் நிவின் பாலி ஒரு கும்பலுடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நாட்களில் நிவின் பாலி தனது திரைப்படம் மற்றும் விரைவில் வெளியாகவிருக்கும் இணைய தொடர் ஒன்றின் படப்பிடிப்பிற்காக கேரளாவில் இருந்தார் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நடிகர் நிவின் பாலி அனைத்து ஊடகங்களின் முன்பாகவும், தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். என் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் கூறினார். மேலும் இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் ஊடகங்களை சந்தித்த நிவின் பாலி, அந்த பெண்ணிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x