‘தி கோட்’ ரிலீஸ்: மதுரையில் போக்குவரத்து இடையூறாக டூவீலர்களில் ஊர்வலம் சென்ற விஜய் ரசிகர்கள்!  


மதுரை: மதுரையில் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகனங்களில் ஊர்வலம் சென்றனர். காவல்துறையினர் சில இடங்களில் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியானது. மதுரையில் சில திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் டூவீலர்களில் ஊர்வலம் செல்வதற்கு திட்டமிட்டனர்.

அதன்படி, இன்று காலை நேரத்தில் மதுரை அண்ணா நகர், தவுட்டுச் சந்தை, எல்லீஸ்நகர் , பெரியார் பேருந்து நிலையம், வசந்த நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் டூவீலர்கள் ஜாலி ரெய்டு போன்று சைலன்சர்களில் சத்தம் எழுப்பியும், தமிழக வெற்றிக் கழக கட்சி கொடி, ரசிகர் மன்ற கொடிகளை தூக்கி பிடித்த படியும், அதிக சத்தம் எழுப்பியும் சென்றனர்.

ரசிகர்களின் இச்செயல் சில இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். காவல் துறையினர் சில பகுதியில் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

x