பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை: நடிகர் சங்கம் தீர்மானம்


தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் கமிட்டி உருவாக்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி, மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாலியல் புகார்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரித்து, உண்மை இருந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்க, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக் கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி எண் ஏற்கெனவே உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம்.

யூடியூப்பில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் கமிட்டி, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது

x