ஹேமா கமிட்டி அறிக்கை; நடிகைகள் சொன்னது என்ன?


சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை இந்தியத் திரைத்துறையில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. இதுபற்றி முன்னணி நடிகைகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பது பற்றி இதில் பார்க்கலாம்.

ஹேமா கமிட்டி அறிக்கை பூதாகரமானதைத் தொடந்து ‘அம்மா’ சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 16 செயற்குழு உறுப்பினர்கள் பதவி விலகினார்கள். இதனை கோழைத்தனமான முடிவு என்று விமர்சித்த நடிகை பார்வதி, பெண்களுக்கு சினிமாத்துறையில் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

ஹேமா கமிட்டி போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தான அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா தெலங்கானா அரசுக்கு கோரிக்கை முன்வைத்தார்.

ஹேமா கமிட்டி பற்றி ஊர்வசி, “எல்லாத்துறைகளிலும் பாலியல் தொல்லை உள்ளது. சினிமாத்துறையில் உள்ளதை பேசுவதற்கு அரசு இப்போது ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இனிமேல் யாரும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக நடிகைகள் வெளிப்படையாகப் போராடுகின்றனர்”.

மலையாளத் திரைப்படம் ஒன்றில் தான் முன்பு நடித்த போது அங்கு கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றும் காட்சிகளை அங்கிருந்தவர்கள் பார்த்து அச்சுறுத்தல் கொடுத்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் ராதிகா.
பாதிக்கப்பட்டவர்களோடு கைக்கோத்து நிற்க வேண்டிய நேரம் இது. பிரச்சினைகளை நாம் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் எனக் கூறியிருக்கிறார் நடிகை ரேவதி. மேலும், இது மாற்றத்திற்கான நேரம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

”விமர்சனமும், பயமும் சம்பந்தப்பட்டவர்களை உடைக்கலாம். அவர்களை மதிப்பீடு செய்யாமல் முழு ஆதரவும் கொடுக்க வேண்டும். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இங்கு பாலியல் ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இதில் பெண்களுக்குதான் அதிக பாதிப்பு” எனப் பேசியிருக்கிறார் நடிகை குஷ்பு.

x