இன்னும் ஒரு மாதத்தில் ‘ஜெயிலர்2’ - அப்டேட் கொடுத்த இயக்குநர் நெல்சன்!


சென்னை: ‘ஜெயிலர்2’ படம் குறித்தான அப்டேட்டை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆண்டு வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலைப் பெற்றது. ’ஜெயிலர்2’க்கான கதை உருவாகிறது என்ற விஷயமும் அப்போது சொல்லப்பட்டது. இயக்குநர் நெல்சனும் அதை உறுதிப்படுத்தினார். ‘ஜெயிலர்2’ படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நெல்சனிடம் ‘ஜெயிலர்2’ படத்திற்கான அப்டேட் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் இன்னும் ஒரு மாதத்தில் ‘ஜெயிலர்2’ அப்டேட் வந்துவிடும் என்றும், தயாரிப்பு நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் பான் இந்தியா படமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ரஜினிகாந்த் தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதனை முடித்துவிட்டு அடுத்து ‘ஜெயிலர்2’ படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

x