வேட்டையனுக்காக கங்குவா ரிலீஸை தள்ளி வைத்த சூர்யா


நடிகர் கார்த்தி நடித்துள்ள படம், ‘மெய்யழகன்’. ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கியுள்ள இதில், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா உட்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா, ஜோதிகா தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடந்தது. விழாவில் நடிகர் சிவகுமார் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் சூர்யா பேசும்போது, “ஒரே இரவில் நடக்கும் கதையை கொண்ட படம் , ‘மெய்யழகன்’. ‘கங்குவா’ படம் மீது எதிர்பார்ப்பு இருப்பது எனக்குத் தெரியும். இரண்டரை வருடமாக ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது ‘கங்குவா’ தான். அக்டோபர் 10-ம் தேதி ‘வேட்டையன்’ படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர். சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவதுதான் சரி. ‘கங்குவா’, ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். ‘கங்குவா’ படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பைக் காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “சூர்யாவின் அன்புக்கும் பாசத்துக்கும் நன்றி. அவர் படமும் நன்றாக ஓட வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்

x