சின்மயிக்கு முக்கிய நடிகர்கள் ஏன் ஆதரவு தரலை? முதலில் இங்கிருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் - ராதிகா சரத்குமார்


“சின்மயி தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து குரல் கொடுத்தார். அவருக்கு ஏன் திரையுலகில் முக்கிய நடிகர்கள் ஆதரவு தரவில்லை? முதலில் இங்கிருக்கும் பிரச்சினைகளை நாம் சரி செய்ய வேண்டும்” என்று நடிகை ராதிகா சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து பேட்டியளித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார், தான் ஒரு மலையாளப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் அனைவரும் செல்போனில் வீடியோவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததாகவும், அது குறித்து விசாரித்த போது, மலையாள திரையுலகில் பல நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமிரா வைத்து அவர்கள் உடை மாற்றுவதை வீடியோக்களாக பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது” என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

இது குறித்து நடிகை ராதிகா அளித்துள்ள பேட்டியில், “மலையாள படம் ஒன்றில் நான் நடித்தபோது அங்கு ஆண்கள் கூட்டமாக அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். என்ன விஷயம் என்று தெரியாததால் நான் அமைதியாக கடந்துவிட்டேன். பின்னர் அது குறித்து விசாரித்த போது தான், கேரவனில் ரகசிய கேமரா வைத்து பெண்கள் உடை மாற்றும் காட்சிகளைப் பார்த்து சிரித்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

இதுபற்றி சக நடிகைகளிடம் சொல்லி எச்சரித்தேன். நானும் அந்த சமயத்தில் பயந்துபோய் ஹோட்டல் அறைக்கு சென்று உடை மாற்றினேன். மலையாளத்தில் மட்டும் என்றில்லாமல் இப்போது வரை எல்லா மொழியிலும் சினிமாவில் இந்தப் பிரச்சினை இருக்க தான் செய்கிறது. சினிமாவில் சிஸ்டமே சரியில்லை. இதை சொல்வது நம்மை நாமே பார்த்து துப்பிக் கொள்வதற்கு சமம். சின்மயி தனக்கு நேர்ந்த அத்துமீறல் பற்றி குரல் கொடுத்தார். அவருக்கு ஏன் திரையுலகில் முக்கிய நடிகர்கள் ஆதரவு தரவில்லை? முதலில் இங்கிருக்கும் பிரச்சினைகளை நாம் சரி செய்ய வேண்டும்” என கூறியிருக்கிறார்.

x