தென்னிந்திய நடிகர் சங்கத்திலும் ‘ஹேமா கமிட்டி’ போல குழு அமைக்கப்படும்: நடிகர் விஷால் பேட்டி!


கேரளாவைப் போல தமிழகத்திலும் நடிகர் சங்கம் சார்பில், ஹேமா கமிட்டி போல 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என நடிகர் விஷால் பேட்டி அளித்துள்ளார்.

நடிகர் விஷால் இன்று தனது 48ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி இன்று காலை கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதியவர்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவரிடம், கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசுகையில், , “தமிழ் திரைத்துறையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு 20% பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மீதம் 80% பேருக்கு ஏமாற்றம் கிடைக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். நாம் தான் சுதாரித்து செயல்பட வேண்டும். கேரள ஹேமா கமிட்டி போல தமிழ்நாட்டில் நடிகர்கள் சங்கம் சார்பில் இதுபோன்ற பாலியல் அத்துமீறல் பிரச்சினைகளுக்கு பத்துபேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட இருக்கிறது.

சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்று சொல்லி பெண்களிடம் அத்துமீறுபவனை செருப்பால் அடிக்க வேண்டும். குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். திரையுலகில் என்ன நடக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு இருக்க நாங்கள் போலீஸ் கிடையாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

x