எதிர்மறை விஷயங்களுக்கு என் காதுகள் மூடியே இருக்கும் | யுவன் சங்கர் ராஜா


எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். அதனால் எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதில் கொடுக்காதீர்கள் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியிருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ’GOAT' படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை, யுவன் இசை ஏமாற்றி விட்டது என பலரும் விமர்சனம் தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் சங்கர் ராஜா மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.

அதோடு, ‘GOAT' பட இசைக்கு தனக்கு வந்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். அந்நிகழ்வில் பேசிய அவர், , "தோல்வியில் இருந்து வெற்றி என்பதைப் பற்றித் தான் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நான் இசையமைத்த சில படங்கள் வெற்றி பெறவில்லை. இதனால் நான் இசையமைக்கும் படங்கள் எல்லாமே தோல்வியடையும் என்று முத்திரை பதித்தனர். அதன்பிறகு நான் தனி அறையில் அமர்ந்து, கதவை பூட்டிக் கொண்டு அழுது கொண்டிருப்பேன்.

எங்கு தவறு நடந்தது என்று யோசிப்பேன். சில நாட்கள் கழிந்தன. பிறகு மீண்டும் இசையமைக்க துவங்கினேன். இப்படித் தான் இங்கு உங்கள் முன் நிற்கிறேன். இதில் உள்ள யோசனை என்னவென்றால், பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது. உங்கள் தலை நிமிர்ந்த படி எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். இதனால் தான் என்னால் இத்தனை ஆண்டுகள் இந்தத் துறையில் நீடித்து நிற்க முடிகிறது.

எனக்கு வரும் கருத்துக்கள், பேச்சுகள் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே இருந்தால், இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என் காதுகள் எதிர்மறை விஷயங்களுக்கு மூடியே இருக்கும். நல்ல இசை மற்றும் பாசிட்டிவிட்டிக்கு மட்டுமே என் காதுகள் திறந்திருக்கும். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x