சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ இதுவரை ரூ.100 கோடி வசூல்!


சென்னை: சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3-ம் தேதி சுந்தர் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘அரண்மனை 4’. இந்தப் படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஹாரர் - காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் கோடைக்கால விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிகப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் இந்த ஆண்டின் இரண்டாவது ரூ.100 கோடி வசூல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது 4ஆம் பாகம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

x