கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ‘பாரா’ சிங்கிள் பாடல் எப்படி?


சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

கடந்த 1996-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரவேற்பை பெற்ற ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

எப்படியிருக்கிறது முதல் பாடல்: இதுவரை தனது பெரும்பாலான படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றிய ஷங்கர் தனது ரூட்டை மாற்றி அனிருத்துடன் கைகோத்திருக்கிறார். இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து ஷ்ருதிகா சமுத்ராலா பாடியுள்ளார். “பாரா வருவது ஓராட் படையா...வீரா விழுப்புண் அலங்காரா” என தொடங்கும் முதல் வரி நன்றாகவே உள்ளது.

“என் தாய் மண்மேல் ஆணை, இது தமிழ் மானத்தின் சேனை, வெள்ளை ரத்தம் தொட்டு வாளில் ஏற்று சாணை” போன்ற வரிகள் வீரத்தை பறைசாற்றும் வகையில் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. பின்னணி இசை உற்சாகத்தை கூட்டுகிறது. அனிருத்தின் முதல் வரலாற்று பாடல் முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது பாடல் வீடியோ:

x