பெண்ணியம் காக்க வேண்டும்; தமிழ் பாரம்பரியம் போற்ற வேண்டும் - நடிகர் விஜய்க்கு தாய் ஷோபா வாழ்த்து!


நடிகர் விஜயின் தவெக கட்சிக்கும், விஜய்க்கும் தனது வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார் அவரது தாய் ஷோபா.

நடிகர் விஜய் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். காலை 9.30 மணியளவில் பனையூர் வந்த விஜய், கட்சியின் உறுதிமொழி ஏற்று, கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலே - கீழே சிவப்பு நிறத்திலும் நடுவில் மஞ்சள் நிறத்திலும் அமைந்த கட்சிக் கொடியின் நடுவில் வாகை மலரும் அதன் அருகில் இரண்டு பிளிறும் போர் யானைகளும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவிற்கு விஜயின் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ. சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

விஜயின் கட்சி கொடி அறிமுகம் குறித்து வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் ஷோபா. அதில் பேசிய அவர், “இன்று மகிழ்ச்சியாகவும் படபடப்பாகவும் இருக்கிறது. ஏன் படபடப்பு என்றால் நாட்டுக்கே ராஜா என்றாலும் அவர் எனக்குப் பிள்ளை. இப்போது போலவே, அவர் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். தமிழ் மொழியின் பாரம்பரியம் போற்ற வேண்டும், பெண்ணியம் காக்க வேண்டும், புரட்சிகரமான திட்டங்கள் கொண்டு வர வேண்டும். வானில் பறக்கும் உன் கொடி அரசியல் வெற்றிக்கு முதல் படி. ஏற்கனவே நான் ஒரு சி.எம். (செலிபிரிட்டி மதர்) இப்போது நான் பி.எம். (ப்ரவுட் மதர்)” என உற்சாகம் பொங்க பேசியிருக்கிறார்.

x