மருமகனை இயக்குகிறார் நடிகர் அர்ஜூன்: இந்தப் படத்தின் இரண்டாம் பாகமா?


நடிகர் அர்ஜூன் தனது மருமகன் உமாபதியை ஹீரோவாக வைத்து படமெடுக்கப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் உமாபதிக்கும் கடந்த ஜூன் மாதம் காதல் திருமணம் நடந்தது. நடிகர் அர்ஜூன் தொகுத்து வழங்கிய ’சர்வைவர்’ நிகழ்ச்சியில் உமாபதியும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அதன் மூலம் ஐஸ்வர்யா-உமாபதி அறிமுகமாகி திருமணம் செய்து கொண்டனர். இப்போது, உமாபதி கதாநாயகனாகவும் பல படங்கள் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு பெயர் சொல்லும் வெற்றிப் படங்களாக எதுவும் அமையவில்லை. இதனையடுத்து, தனது மருமகனை வைத்து ஹீரோவாக படமெடுக்க இருக்கிறார் அர்ஜூன்.

அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘ஏழுமலை’ படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நடிகர் அர்ஜூனே இயக்கி இருப்பார். கமர்ஷியலாக இந்தப் படம் அவருக்கு அப்போது வெற்றியை கொடுத்தது. அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தனது மருமகன் உமாபதிக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இது குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.

x