தங்க ரதத்தில் ஒரு வெள்ளி நிலவு... குடும்பத்துடன் பவதாரிணி எடுத்த கடைசி புகைப்படம்!


குடும்பத்துடன் பவதாரிணி...

மறைந்த பாடகி பவதாரிணி தன் குடும்பத்துடன் எடுத்த கடைசி புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். புற்றுநோய் காரணமாக இலங்கையில் சிகிச்சைக்காக சென்றவர், சிகிச்சை ஆரம்பிக்கும் முன்பே காலமானார்.

இந்த செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது உடல் மறுநாள் சென்னையில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் தேனி, பண்ணைப்புரத்தில் உள்ள இளையராஜாவின் சொந்த வீட்டில் பவதாரிணி உடல் அவர தாய் ஜீவா உடல் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச்சடங்கின் போது வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன் ஷங்கர் ராஜா என பவதாரிணியின் சகோதரர்கள் அனைவரும் ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடல் பாடி வழியனுப்பி வைத்தது பார்ப்பவர்களை கலங்கடிக்கச் செய்தது.

இந்த சூழ்நிலையில்தான் இயக்குநர் வெங்கபிரபு பவதாரிணியுடனான கடைசி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன், வாசுகி பாஸ்கர் என தனது குடும்பத்தினர் அனைவரையும் பவதாரிணி சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘பவதாரிணியுடன் நாங்கள் அனைவரும் இணைந்திருந்த படம் இது’ என உருக்கமாகக் கூறியுள்ளார் வெங்கட்பிரபு.

இந்தப் பதிவின் பின்னணியில் ‘தங்க ரதத்தில் ஒரு வெள்ளி நிலவு’ பாடலைப் பகிர்ந்துள்ளார் வெங்கட்பிரபு. தன்னுடைய இறப்பு குறித்து முன்பே தெரிந்து வைத்திருந்த பவதாரிணி தன்னுடைய குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்டதாகவும், அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தந்ததாகவும் முன்பு செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது வெங்கட்பிரபுவின் இந்தப் பதிவு.

இதையும் வாசிக்கலாமே...


பெரும் காலத்தின் மனசாட்சி... மகாத்மா காந்திக்கு கமல்ஹாசன் புகழாரம்!

x