நடிகைக்கான முகம் இல்லை என நிராகரித்தார்கள்: நடிகை ராஷ்மிகா வேதனை


சென்னை: நடிகைக்கான முகம் தனக்கில்லை என்று ஆரம்பத்தில் பல நிராகரிப்புகளை சந்தித்ததாக நடிகை ராஷ்மிகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டிலும் அதிக படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். நேஷனல் கிரஷ் என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல நிராகரிப்புகளையும் அவமானங்களையும் தான் சந்தித்ததாக ராஷ்மிகா மந்தனா தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய ஆரம்ப காலத்தில் எங்கு ஆடிஷன் நடந்தாலும் அங்கு செல்வேன். ஆசையுடன் செல்லும் நான் திரும்பும் போது கண்ணீருடன் தான் வருவேன். அங்கு என் நடிப்பு சரியில்லை, கதாபாத்திரத்திற்கு பொருத்தமில்லை என்று சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. நடிகைக்கான முகமே எனக்கு இல்லை என்று சொல்லி நிராகரித்தார்கள்.

இதுபோல, கிட்டத்தட்ட 20-25 படங்களில் நடந்திருக்கும். இருந்தாலும் மனம் தளராமல் முயற்சி செய்தேன். ஒரு படத்தில் நான் தேர்வாகி படப்பிடிப்பு வரை சென்று அந்தப் படம் கைவிடப்பட்ட கதை எல்லாம் உண்டு. இப்படி பல கஷ்டங்களைத் தாண்டி தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்” என உருக்கமாகப் பேசியுள்ளார்.

x