ரஜினி, ஷாருக்கான் இல்லை: 2024-ல் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா?


சென்னை: இந்த வருடத்தின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்பது பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.

இந்திய சினிமா கதாநாயகர்களை மையப்படுத்தியதாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. பெண்களை மையப்படுத்தியும், அவர்களது பிரச்சினைகளையும் பேசும் படங்கள் முன்பெல்லாம் அரிதினும் அரிதாக வந்தது. ஆனால், இப்போது காலமாற்றத்திற்கேற்ப கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளும் தொடர்ச்சியாக வரத் தொடங்கி இருக்கிறது.

நடிகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் திரைத்துறையில் ஊதியம் தர வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கி இருக்கிறது. அந்த அளவிற்கு படத்தின் பட்ஜெட்டில் பாதியாக கதாநாயகர்களின் சம்பளம் இருக்கிறது. அதிலும் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் சம்பளம் பற்றி சொல்லவே வேண்டாம்.

நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே கேட்கவே செய்கிறது. இதுபோன்ற சமயத்தில்தான் இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அது வேறு யாரும் இல்லை. நடிகர் அல்லு அர்ஜுன்தான். கமர்ஷியலாக ‘புஷ்பா’ படத்தின் பெரும் வெற்றி அவருக்கான இந்திய ரசிகர்களை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

இந்த வருட இறுதியில் வெளியாக இருக்கும் ‘புஷ்பா2’ மீது எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்தப் படத்திற்கு அவருடைய சம்பள விவரம் தான் பலரையும் மலைக்க வைத்திருக்கிறது. அதாவது, அவர் ’புஷ்பா2’ படத்திற்கு என்று தனியாக சம்பளம் எதுவும் வாங்கவில்லையாம். அதற்கு பதிலாக படத்தின் லாபத்தில் இருந்து 33% அவர் பெறுகிறார் எனத் தெரிகிறது.

அதாவது திரையரங்கு, ஓடிடி, சாட்டிலைட், இசை மற்றும் டப்பிங் உரிமம் என அனைத்தும் சேர்த்து அவருக்கான லாப கணக்கை கொடுக்க இருக்கிறார்கள். ‘புஷ்பா2’ படம் உலகம் முழுவதும் ரூ. 1000 கோடி வசூலிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது. இதெல்லாம் சேர்த்து அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படத்தின் சம்பளம் ரூ. 330 கோடி என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

x