தனுஷை வம்பிழுத்தாரா சிவகார்த்திகேயன்? - சர்ச்சையாகும் பேச்சு!


சென்னை: 'கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேச்சு இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த விழாவிற்கு வந்து பேசிய சிவகார்த்திகேயன் சூரிக்கும் தனக்கும் இடையேயான நட்பு பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

சூரி ஜெயித்தால் தான் ஜெயித்தது போல என்று பேசியவர், “யாரையும் கண்டுபிடித்து, இவருக்கு நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஏனென்றால் நான்தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிவிட்டார்கள். நான் அப்படியான நபர் இல்லை. நம் நண்பர் என்று ஒருவரை அறிமுகம் செய்வோம் இல்லையா?! அப்படித்தான் பல திறமையாளர்களை நான் நினைக்கிறேன். நீங்கள் எனக்குக் கொடுத்த நடிகர் என்ற இடத்திலிருந்து அதை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்றார்.

இந்தப் பேச்சுதான் இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. நடிகர் தனுஷ் தன்னுடைய ‘3’ படம் மூலம் சிவகார்த்திகேயனை திரைத்துறைக்குக் கொண்டு வந்தார். மேலும், சிவகார்த்திகேயனின் ‘எதிர்நீச்சல்’ படத்தையும் தயாரித்தார். இப்படி அவர்களுக்குள் இருந்த நல்ல நட்பு கடந்த சில வருடங்களாக பிரச்சினையாகி இருக்கிறது. தனுஷ் தன்னை வளர்த்துவிட்டதைத் தான் இப்படி சிவகார்த்திகேயன் மறைமுகமாகத் தாக்கி பேசுகிறார் என இணையவாசிகள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

x