கடலூர்: இயக்குநர் சேரன் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரிடம் சண்டை போட்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் சேரன் இன்று காலை தன்னுடைய காரில் சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது, கன்னாங்குப்பம் பகுதியில் சேரனுடைய காருக்குப் பின்னால் தனியார் பேருந்து ஒன்று வந்திருக்கிறது. அந்த பேருந்து ஓட்டுநர் விடாமல் ஹாரன் அடித்துக் கொண்டே வந்திருக்கிறார். இதனால், ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த இயக்குநர் சேரன் தன் காரை விட்டு இறங்கி அந்த ஓட்டுநரிடம் சண்டைக்கு வந்திருக்கிறார். ‘இவ்வளவு சத்தமாக ஹாரன் அடிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? மற்றவர்கள் வண்டி ஓட்ட வேண்டாமா? சாலையில் ஒதுங்க இடம் இல்லாத இடத்தில் இப்படி ஹாரன் அடிக்கக் கூடாது’ என சரமாரியாகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பதிலுக்கு அந்தப் பேருந்து ஓட்டுநரும் சண்டை போட அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குநர் சேரன் திரை பிரபலம் என்பதாலும் அந்தப் பகுதியில் அதிக கூட்டம் கூடியிருக்கிறது. இந்த விஷயம் கடலூர் எஸ்.பி. ராஜாராம் காதுகளை எட்டியிருக்க அவர் அந்தப் பகுதி போலீஸாரை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இதுதொடர்பாக இயக்குநர் சேரன் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.