'மகாராஜா’ இயக்குநருடன் கைக்கோர்க்கும் நயன்தாரா!


’மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனுடன் நடிகை நயன்தாரா புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றது. திரையரங்குகளில் மட்டுமல்லாது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இந்தப் படத்தில் நித்திலன் சுவாமிநாதனின் கதையும் பெரிதும் பேசப்பட்டது. இதனால், இவரது அடுத்தப் படம் என்ன என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், கதாநாயகியை மையப்படுத்திய கதையாக உருவாக இருக்கும் இவரது அடுத்தப் படத்தின் நாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ‘மகாராணி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்கிறார்கள்.

கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நயன்தாரா இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லி விட்டார் என்கிறார்கள். இந்தப் படம் தவிர்த்து ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’ மற்றும் கவின் நடிப்பில் ஒரு புதிய படம் ஆகியவை நயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

x