இஸ்தான்புல் நகரில் இந்தி நடிகர் மீது தாக்குதல்


பிரபல இந்தி நடிகர் அஸ்வத் பட். ஹைதர், ராஸி, மன்டோ, கேசரி, மிஷன் மஜ்னு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவான சீதாராமம் படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தார். இவர் துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஒரு கும்பல் இவரைத் தாக்கி கொள்ளையடிக்க முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, “பியோகுலு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கலாட்டா டவருக்கு சென்று கொண்டிருந்தேன். கையில் சங்கிலி வைத்திருந்த ஒருவர் என் முதுகில் தாக்கினார். ஒரு கும்பல் நின்று கொண்டிருந்தது. நான் திரும்பிச் சண்டை போடுவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் ஒரு கால் டாக்ஸி டிரைவர் உதவ வந்தார். அவர்கள் துருக்கி மொழியில் ஏதோ பேசிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

என் முதுகில் இருந்த காயத்தைப் பார்த்துவிட்டு போலீஸுக்கு போகும்படி சொன்னார் அவர். சுற்றுலா தலங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அங்கு பிக்பாக்கெட்டுகள் அதிகம் என்று அறிவுறுத்தி இருந்தார்கள். இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. மத்திய கிழக்கு, எகிப்து, ஐரோப்பாவின் பல பகுதிகளுக்குச் சென்றிருக்கிறேன். இதுபோன்ற எந்த சம்பவமும் எனக்கு நடந்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்

x