’தங்கலான்’ விழா மேடையிலேயே சிலம்பம் சுற்றிய நடிகைகள்!


’தங்கலான்’ பட இசைவெளியீட்டு விழாவில் நடிகைகள் மாளவிகா மற்றும் பார்வதி இருவரும் மேடையிலேயே சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளனர்.

இயக்குநர் இரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விழா மேடையிலேயே நடிகை மாளவிகா மோகனனும் பார்வதியும் சிலம்பம் சுற்றிக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோடு நடிகை பார்வதியின் பேச்சும் கவனம் ஈர்த்துள்ளது.

விழாவில் பேசிய நடிகை பார்வதி, “நான் இன்னும் கங்கம்மா கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரவில்லை. இரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. இங்கே எல்லாம் அரசியல் தான். அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை. சினிமா பொழுதுபோக்கிற்கான ஒன்று என்றாலும் அதையும் அரசியல் ஊடகமாகதான் பார்க்கிறேன்.

’தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியாவது எதேச்சையாக நடக்கவில்லை. நம் சமூகத்தில் சமத்துவமின்மை குறித்து தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதை நம் மனம் ஏற்க மறுக்கிறது என்றால் அதுதான் அரசியல் எனபதைப் புரிந்து கொள்ள வேண்டும். கலை வழியே தனது அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது இராணுவத்தில் நானும் ஒரு வீராங்கனை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.

x