‘இன்னும் வாழ தொடங்கவே இல்லை’: நடிகை கீர்த்தி சுரேஷ் கண்ணீர் பதிவு!


தனது தோழி தன்னை விட்டு மறைந்து விட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கண்ணீர் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். ’கடந்த சில வாரங்களை கடப்பதற்கு மிகவும் கடினமாகவே இருந்தது. குழந்தைப் பருவத்தில் இருந்து என்னுடன் நட்பில் இருந்த தோழி எங்களை விட்டு இவ்வளவு சீக்கிரம் மறைந்திருப்பதை நம்பவே முடியவில்லை.

21 வயதிலேயே அவளுக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த எட்டு வருடங்களாக அதனுடன் போராடிக் கொண்டிருந்தார். கடந்த நவம்பர் மாதம் தனது மூன்றாவது சர்ஜரி செய்து முடித்தார். அப்போது அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன். இதற்கு மேல் தன்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியாது என்று உடைந்து அழுதாள். அவள் முன்னால் என் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கண்ணாடியும் முகமூடியும் அணிந்து கொண்டு வெளியே வந்து அழுது தீர்த்தேன். அவள் சுயநினைவு இல்லாத போது தான் கடைசியாக அவளைப் பார்த்தேன்.

உலகத்தை இன்னும் முழுதாக பார்க்காத, வாழ்வை இன்னும் வாழத் தொடங்காத, பல கனவுகளுடன் வலம் வந்த இந்த சின்னப் பெண்ணுக்கு ஏன் இவ்வளவு துயரம் என்பதுதான் என் மனதில் எழும் கேள்வி. ஆனால், இது எதற்கும் என்னிடம் பதில் இல்லை. நீ எங்களுடன் இல்லாமல் போய் ஒருமாதம் ஆகிறது. உன்னை நினைக்காமல் என்னுடைய நாட்கள் கடப்பதில்லை. இன்று உன் பிறந்தநாள்! எப்போதும் நீ என் நினைவில் இருப்பாய்!’ என உருக்கமாக பகிர்ந்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

x