இந்திய குடியுரிமை பெற்ற பின் வாக்களித்த அக்‌ஷய் குமார்


மும்பை: பிரபல இந்தி நடிகர் அக் ஷய் குமார். இவர் தமிழில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த 16 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், நண்பரின் ஆலோசனையின் பேரில் கனடா சென்று குடியேற முடிவு செய்தார். 2011-ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார். பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால், அங்கு செல்லவில்லை. இது சர்ச்சையானதை அடுத்து, கடந்த 2023-ம்ஆண்டு இந்திய குடியுரிமையை மீண்டும் பெற்றார். குடியுரிமை பெற்றபின் முதன்முறையாக, மக்களவைக்கான 5-ம் கட்ட தேர்தலில் நேற்று வாக்களித்தார்.

மும்பையில் வாக்களித்த அவர், “நம் இந்தியா வளர்ச்சியடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன். வாக்காளர்கள் தங்களுக்கு யார் சரியானவர் என்ற நினைக்கிறார் களோ அவர்களுக்கு வாக்களிக்கலாம். மும்பையில் வாக்குப்பதிவு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். வாக்களித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்றார்.