உருவாகிறது இன்னொரு ‘டிராகன்’ - ஆகஸ்டில் படப்பிடிப்பு


ஹைதராபாத்: ‘கே.ஜி.எஃப்’ படங்களின் மூலம் கவனிக்கப்பட்ட இயக்குநர் பிரசாந்த் நீல், அடுத்து ‘சலார்’ படத்தை இயக்கினார். இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அதை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் பான் இந்தியா படத்தை இயக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘டிராகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இத்தலைப்பை இந்தி தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹரிடம் இருந்து பெற்றுள்ளனர். கரண் ஜோஹர் தனது ‘பிரம்மாஸ்த்ரா’ படத்துக்கு முதலில் இந்தத் தலைப்பைத்தான் வைத்திருந்தார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்துக்கும் ‘டிராகன்’ என்ற தலைப்பையே வைத்துள்ளனர். இந்த தலைப்பை, சில வாரங்களுக்கு முன் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் பிரசாந்த் நீல், ஜுனியர் என்டிஆர் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக, தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.