ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஓட்டியவாறு பேட்டி: நடிகர் பிரசாந்துக்கு ரூ.2,000 அபராதம்


சென்னை: நடிகர் பிரசாந்த், நேற்று தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இருசக்கர வாகனத்தை (புல்லட்) ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களைப் பகிர்ந்தவாறு பேட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே பேசியிருந்தார்.

அவருக்குப் பின்னால் பெண் தொகுப்பாளர் அமர்ந்திருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஹெல்மெட் அணியாதது குறித்து ரசிகர்கள் சிலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அந்த நேர்காணலின் தொகுப்பாளர் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தலா ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தையும் போக்குவரத்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டது. பாண்டிபஜாரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதுஒருபுறம் இருக்க சிறிது நேரத்தில் நடிகர் பிரசாந்த் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், எப்போதும் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக இருசக்கர வாகனம் ஓட்டவும் என அறிவுறுத்தி இருந்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது.

x