பட விழாவில் கலந்துகொள்ள ரூ.3 லட்சம் கேட்ட நடிகை: தயாரிப்பாளர் புகார்


அறிமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கியுள்ள படம், ‘நாற்கரப்போர்’. சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. இதில் அபர்ணதி நாயகியாக நடித்துள்ளார். அஸ்வின், லிங்கேஸ், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். V6 பிலிம் சார்பில் எஸ். வேலாயுதம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஆனால் நாயகி அபர்ணதி பங்கேற்கவில்லை. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, அபர்ணதி பங்கேற்காததற்கான காரணத்தைக் கூறினார்.
அவர் கூறும்போது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இயக்குநரும் அந்த கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி சகஜம். நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். அபர்ணதி சிறந்த நடிகை. அவர் இந்த விழாவுக்கு வரவில்லை. நடிகைகள் புரமோஷனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் சாபக்கேடாகவே மாறிவிட்டது.

அபர்ணதியை விழாவுக்கு அழைத்த போது பணம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று சொன்னதுடன் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளைச் சொன்னால் இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவுக்கு வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள்?” என்றார்.

இயக்குநர்கள் மீரா கதிரவன், சுப்பிரமணிய சிவா, லெனின் பாரதி, கவிதா பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

x