இசையமைப்பாளர் இளையராஜா மீதான விமர்சனம்: யுவன் ஷங்கர் ராஜா பதில்!


இசையமைப்பாளர் இளையராஜா மீது எழும் பல்வேறு விமர்சனங்கள் குறித்தானக் கேள்விக்கு யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்திருக்கிறார்.

சென்னையில், வரும் 27ம் தேதி இசைக்கச்சேரி ஒன்றை ‘யுவன் லாங் ட்ரைவ்’ என்ற பெயரில் நடத்த இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதற்கான, பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. அதில், தன்னுடைய இசைக் கச்சேரி குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களை தான் பாட இருப்பதாக சொன்னவர் மறைந்த பாடகி பவதாரிணி குரலையும் ஏஐ தொழில்நுட்பத்தில் இசைக்கச்சேரியில் கொண்டு வர இருப்பதையும் பகிர்ந்தார்.

மேலும் பேசிய அவர், “'GOAT' படத்தில் பவதாரிணி பாடுவதாக இருந்தது. அந்த சமயத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர், எல்லாம் மாறிவிட்டது. ‘லால்சலாம்’ படத்தில் ரஹ்மான் சார் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் பேசி பல விஷயங்கள் தெரிந்து கொண்ட பிறகு, பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் 'GOAT' படத்தில் கொண்டு வந்தோம்” என்றார்.

பின்பு, இளையராஜா மீது சமீபகாலமாக வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “விமர்சனங்களை விமர்சனங்களாக தான் நாங்கள் பார்க்கிறோம். எங்களுக்கு அது எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார்.

x