சென்னையில் நாளை மறுநாள் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!


'சர்தார் 2' பட சண்டை பயிற்சியாளர், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதன் எதிரொலியாக சென்னையில் நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் ‘சர்தார்2’ படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் கடந்த 17-ம் தேதி படப்பிடிப்பில் சண்டை கலைஞர்கள் சங்க உறுப்பினர் ஏழுமலை எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் காலமானார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக சென்னையில், நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ’படப்பிடிப்பில் பணிபுரியும்போது நமது சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் படப்பிடிப்பு நிலையங்களில் இருக்க வேண்டும் எனவும் ஆம்புலன்சுடன் கூடிய மருத்துவ வசதிகள் கொடுக்க வேண்டும் எனவும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தயாரிப்பு சங்கத்துக்கும் வேண்டுகோள் விடுத்து வருகிறோம்.

ஆனால், சில நிறுவனங்களைத் தவிர பெரும்பாலான நிறுவனங்கள் இதைப் பின்பற்றுவதில்லை. எனவே, இதுபற்றி சங்கங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வருகிற 25-ம் தேதி வடபழனி கமலா தியேட்டரில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடைபெறும். அதில் அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக நாளை மறுநாள் (25.07.2024) சென்னையில் சின்னத்திரை, பெரியதிரை படப்பிடிப்பு நடைபெறாது.

வெளியூரில் நடக்கின்ற அனைத்து படப்பிடிப்புகளிலும் காலை 9 மணி முதல் 10 மணிவரை அனைத்து உறுப்பினர்களையும் படப்பிடிப்பு தளத்துக்கு வரவழைத்து பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

x