சின்னத்திரை நடிகர் நேத்ரனுக்கு புற்றுநோய்: மகள் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ


சென்னை: பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகள் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகர், டான்ஸர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் நேத்ரன். இவரது மனைவி தீபாவும் சீரியல் நடிகை. இவரது மகளுடன் முன்பு விஜய் டிவியின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரஞ்சிதமே’ என்ற சீரியலில் நடித்து வருகிறார். மூத்தமகள் அபிநயாவும் நடிப்பில் ஆர்வம் கொண்டு சமீபத்தில் வெளியான ‘கனா காணும் காலங்கள்’ வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில், அபிநயா, நேத்ரனுக்கு கல்லீரல் புற்றுநோய் உறுதியாகி இருப்பதை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த விஷயத்தை வெளிப்படையாக சொல்ல தான் தயங்கியதாகவும் நேத்ரனும் இதுபற்றி வெளியில் சொல்வதை விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

இருந்தாலும் தனது தயக்கங்களை எல்லாம் உடைத்து இப்போது இந்த செய்தியை பகிர காரணம் தனது அப்பாவுக்கு அனைவருடைய பிரார்த்தனைகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் என்றும் கூறியிருக்கிறார். அறுவை சிகிச்சை முடித்து நேத்ரன் தற்போது ஐசியுவில் நலமுடன் இருப்பதாகவும் அபிநயா கூறியிருக்கிறார். நேத்ரன் சீக்கிரம் நலமுடன் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் அனைவரும் தங்கள் பிரார்த்தனைகளைக் கூறி வருகின்றனர்.

x