நடிகை கெளதமி புகார்: அழகப்பன் மீண்டும் கைது!


நடிகை கெளதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அழகப்பன் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நடிகை கௌதமி மற்றும் அவரது அண்ணன் ஸ்ரீகாந்த் ஆகியோரது திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் உள்ள நிலத்தை விற்பனை செய்ய கடந்த 2015ம் சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவருக்கு சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பவர் செய்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அழகப்பன், ரகுநாதன், சுகுமாரன், பலராமன் ஆகிய நான்கு பேரும் நிலத்தை அபகரித்து பண மோசடி செய்து ஏமாற்றியதாக நடிகை கெளதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் நேற்று இரவு சென்னையில் அழகப்பன் கைது செய்யப்பட்டார். தற்போது காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஏற்கனவே அழகப்பனை கைது செய்திருந்த நிலையில், நிபந்தனை ஜாமீனில் அழகப்பன் கையெழுத்திட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x