இயக்குநர் ஏ.பீம்சிங் : குடும்பத்துடன் பார்க்கும் படங்களுக்கு இலக்கணம் வகுத்தவர்!


சிவாஜி, ஏ.பீம்சிங்

‘பாசமலர்’ என்றதும் சிவாஜி நினைவுக்கு வருவார். சாவித்திரி நம் எதிரே வந்து நிற்பார். ஜெமினி கணேசன் வருவார். மெல்லிசை மன்னர்களின் பாடல்கள் ஞாபகத்துக்கு வரும். கவியரசரின் ‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி...’ என்கிற வரிகள், நமக்கு நினைவுக்கு வந்து என்னவோ செய்யும். இதையடுத்து சிவாஜியின் ‘பா’ வரிசைப் படங்களும் ஞாபகத்துக்கு வரும். அப்படியே இயக்குநர் ஏ.பீம்சிங்கும் ஞாபகத்துக்கு வருவார்.

’குடும்பத்துடன் பார்க்கவேண்டிய உன்னதச் சித்திரம்’ என்றெல்லாம் சினிமா படத்தின் போஸ்டரில், விளம்பரங்களில் ஒரு வாசகம் இருக்கும். ’உறவுகளின் பாசத்தை உயிர்ப்புடன் சொல்லும் காவியம்’ என்று போடுவார்கள். ‘சேர்ந்தே பிறந்து சேர்ந்தே வளர்ந்து சேர்ந்தே மறைந்த செல்வங்களின் கதை’ என்று ’பாசமலர்’ விளம்பரத்தில் இந்த வாசகத்தைச் சேர்த்திருந்தார்கள். இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் தியேட்டருக்கு ஒன்றாக வந்து படம் பார்க்கும் வகையில் படமெடுத்தவர் பீம்சிங். கதாபாத்திரங்களைச் செதுக்குவதில் கைதேர்ந்த சிற்பி என்று திரையுலகினர் இன்றைக்கும் அ்வரைக் கொண்டாடுகிறார்கள்.

’‘ஒரு சினிமா எப்படி இருக்கணும் தெரியுமா. குடும்பத்தோட எல்லாரும் வந்து பாக்கும்படி இருக்கணும்’’ என்ற வார்த்தையைச் சொல்லித்தான் கதையைத் தேர்வு செய்யவே இறங்குவாராம் பீம்சிங். ஒரு கதையை வெறும் கதையாகப் பார்க்காமல், அதை ரத்தமும் சதையுமாக, உணர்வுகளும் உணர்ச்சிகளும் உலவுகிற கதாபாத்திரங்களாக, உயிர்களாகவே பார்த்தார் பீம்சிங்!

பீம்சிங்... ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். அப்பா பெயர் அகர்சிங். அம்மா ஆதியம்மாள் ஆந்திராக்காரர். மனைவி சோனாபாய், தஞ்சாவூர் ஐயங்கார் குடும்பம். மாமனார் ராகவாச்சாரி ஐயங்கார். மாமியார் மகாராஷ்டிராவைப் பூர்விகமாகக் கொண்டவர். தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. ’பராசக்தி’ உள்ளிட்ட பல படங்களை எடுத்தவர்கள். இவர்களில் கிருஷ்ணன், பீம்சிங் மனைவி சோனாபாயின் அண்ணன்.

கவியரசருடன் பீம்சிங்

இளம் வயதிலிருந்தே சினிமா மீது மிகப்பெரிய மோகம். அந்த ஆசைக்கு அச்சாரம் போடும்விதமாக, கிருஷ்ணன் பஞ்சுவிடம் சேர்ந்தார் பீம்சிங். எடிட்டிங் துறையிலும் நிபுணத்துவம் பெற்றார். நல்ல உதவி இயக்குநர் என்று பெயர்வாங்கினார். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யின் இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு. அடுத்த சிலவருடங்களில் இருந்து சிவாஜியை ரசித்து ரசித்து இயக்குகிற மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்தார் பீம்சிங்!

1952-ம் ஆண்டு ‘பராசக்தி’ வந்தது. 54-ல் எஸ்.எஸ்.ஆர். நடிக்க ‘அம்மையப்பன்’ படத்தை இயக்கினார் பீம்சிங். கருணாநிதி கதை வசனம். ஆனால், படம் வெற்றிபெறவில்லை. மனம் துவளவில்லை பீம்சிங். மீண்டும் கருணாநிதியின் கைவண்ணத்தில், சிவாஜியுடன் ‘ராஜா ராணி’ படத்தில் கைகோத்தார் பீம்சிங். மிகப்பெரிய வெற்றி பெற்றார். 1958-ம் ஆண்டு வெளியான ‘பதிபக்தி’யும் அப்படித்தான். 1959-ம் வருடம் ‘பிரசிடென்ட் பஞ்சாட்சரம்’ என்ற படத்தை இயக்கினார். அதே வருடத்தில் சிவாஜியைக் கொண்டு ‘பாகப்பிரிவினை’ எனும் காவியத்தைப் படைத்தார். ‘பதிபக்தி’யை விட ‘பாகப்பிரிவினை’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதே வருடத்தில் சந்திரபாபுவை வைத்து ‘சகோதரி’ எடுத்தார். ’பொன்னு விளையும் பூமி’ எனும் படத்தை இயக்கினார். ஆனாலும் சிவாஜி - பீம்சிங் ஜோடியை ரசிகர்கள் வெகுவாக விரும்பினார்கள். .

1960-ம் ஆண்டு சிவாஜியை வைத்து ‘படிக்காத மேதை’யை உருவாக்கினார். ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தப்படம். சிவாஜி கதாபாத்திரத்தையும் ரங்காராவ் கதாபாத்திரத்தையும் போல, வேறு எந்தப் படத்திலேனும் சித்திரிக்கமுடியுமா என்பது சந்தேகம்தான் என்று பத்திரிகைகள் எழுதியிருந்தன.

அதே 1960-ம் வருடத்தில், இன்னொரு ஜாக்பாட்டும் பீம்சிங்கிற்குக் கிடைத்தது. ஏவி.எம். தயாரித்து பிரகாஷ்ராவ் இயக்கிய ’களத்தூர் கண்ணம்மா’ படம் பாதியிலேயே நின்றது. செட்டியாருக்கு ஏனோ திருப்தியில்லை. இயக்குநராகவும் விலகிக்கொள்கிறேன் என்று தெரிவித்துவிட்டார். அந்தப் படம் பீம்சிங் கைக்கு வந்தது. எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்தார். கதையை இன்னும் செம்மைப்படுத்தினார். வசனங்களில் இன்னும் கூர்மைப்படுத்தினார். ஜெமினியும் சாவித்திரியும் நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாக, அடுத்த அறுபது ஆண்டுகளுக்குமான கலைஞன் கமல்ஹாசன் திரையுலகுக்குக் கிடைத்தார். ஆக, கமலை வைத்து இயக்கிய முதல் இயக்குநர் எனும் பெருமையும் பீம்சிங்கிற்கு உண்டு.

அதே வருடத்தில் சிவாஜியுடன் இணைந்தார்.‘பெற்ற மனம்’ எடுத்தார். 61-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் இலக்கணம் வகுத்த படமாக, சகோதர பாசத்தின் இலக்கணம் சொல்லும் பாடமாக ‘பாசமலர்’ படைத்தார். இந்தப் படத்தின் வெற்றியும் படம் ஏற்படுத்திய தாக்கமும் அந்த வருடத்துடன் முடிந்துவிடவில்லை. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையிலும் இன்றைக்கும் தொடர்கிறது.

மாற்றுத்திறனாளியின் வேதனை, சகோதர பாசம், பெற்றவர்கள் மீதான அன்பு, மதம் கடந்த பேரன்பு, மருத்துவ மாண்பைப் போற்றும் மனிதம், பெரியப்பா மீதான பாசம், படிக்காத பாமரனின் வெள்ளந்தி அன்பு, நட்பின் ஆழத்தையும் அடர்த்தியும் காட்டுகிற பாங்கு என மனித உணர்வுகளையும் உறவின் சிக்கல்களையும் அந்த உறவுகளின் உன்னதங்களையும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் பீம்சிங்.

இயக்குநர் ஏ.பீம்சிங்

கே.பி.கொட்டரக்காராவின் கதைதான் ‘பாசமலர்’. எழுத்தாளர்களையும் படைப்பாளிகளையும் கதைக்குழுவில் வைத்துக்கொண்டு, கதையின் இண்டு இடுக்கு விடாமல் அலசியெடுத்து விடுவார் பீம்சிங். சோலைமலை, பிலஹரி, இறைமுடி மணி, ராம அரங்கண்ணல் என்று கதைக்குழுவில் இருந்த எல்லோரும் ஜாம்பவான்கள். வங்கக் கதையோ மராட்டியக் கதையோ கேரளக் கதையோ ஆந்திரத்துக் கதையோ... எதுவாக இருந்தாலும் தமிழ் வண்ணம் பூசி தமிழ் சினிமாவுக்குத் தக்கபடி கதை சமைப்பதில் வல்லவர் பீம்சிங் என்று இவர் இயக்கிய படமொன்றுக்கு விமர்சனம் எழுதின பத்திரிகைகள்.

அநேகமாக, திரைத்துறையில் நடிகர் திலகத்தின் முதல் ரசிகன் பீம்சிங்காகத்தான் இருக்கவேண்டும். சிவாஜியை ரசித்து ரசித்துப் படங்களை எடுத்தார். ‘பார்த்தால் பசி தீரும்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பாலும் பழமும்’ என்று ஒவ்வொரு விதமான கேரக்டர்கள் உருவாக்கினார். ஒவ்வொரு படத்திலும் சிவாஜி நடப்பதற்கும் நடிப்பதற்குமான காட்சிகளை வெகு கச்சிதமாக அமைத்தார். பீம்சிங் படம் என்றாலே, இப்போது சுந்தர்.சி, பாண்டிராஜ் படங்களின் கேரக்டர்கள் போல மிகப்பெரிய திரைப்பட்டாளமே இருக்கும். ஏகப்பட்ட நடிகர்கள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே இருக்கமாட்டார்கள். சும்மா வந்துபோகமாட்டார்கள். கதையைப் பலப்படுத்துவதற்கும் நகர்த்திச் செல்வதற்கும் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதேபோல, வசனங்களும் பலம் கொடுக்கும். ஆரூர்தாஸ் வசனங்கள் ஒருசோறுபத உதாரணம்.

சிவாஜிக்கு, பந்துலு, ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், ஏ.சி.திருலோகசந்தர், பி.மாதவன், டி.யோகானந்த், கே.விஜயன் என்று ஏகப்பட்ட இயக்குநர்கள் அவருடைய மிகப்பெரிய விசிறிகளாகவே கிடைத்தார்கள். இவர்களில் பீம்சிங் சிவாஜிக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்குமே கூடுதல் ஸ்பெஷல். சிவாஜியை செப்படிவித்தைகள் செய்து, ஒவ்வொரு கதாபாத்திரமாக உலவவிட்டதெல்லாம் இருக்கட்டும். ‘பாசமலர்’ படத்தில், சிவாஜியின் வீட்டில், கன்னத்தில் கைவைத்தபடி சிவாஜியின் ஓவியம் ஒன்று இருக்கும், கவனித்திருக்கிறீர்களா? பீம்சிங் ரசனைக்கு, தமிழ்த் திரையுலகமும் ரசிக உள்ளங்களும் காலம் முழுக்க வியந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்கும்.

பீம்சிங்கை, சிவாஜி ‘பீம்பாய்’ என்றுதான் அழைப்பாராம். ‘என்ன, பீம்பாய்... இந்த ஸீனுக்கு இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?’ என்று பீம்சிங்கின் தோளில் கைபோட்டபடி ஸ்டைலாகக் கேட்பாராம் சிவாஜி. ’ஓகே’ என்றதும் அப்படியே இருவரும் கட்டிக்கொள்வார்களாம். அவர்களின் நட்புக்கு, கமலாம்மா திருஷ்டியே சுற்றிப்போடுவார்களாம்!

பீம்சிங்கின் இரண்டு கரங்கள்... மெல்லிசை மன்னர்களும் கவியரசரும். பெரும்பாலும் மெல்லிசை மன்னர்களின் இசைதான். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர்’ பாடலும் ‘வாராயோ தோழி வாராயோ’வும் என்றும் மார்க்கண்டேயப் பாடல்கள்.

’பாசமலர்’ படத்தில் சிவாஜி ஓவியம்

‘பொன்னொன்று கண்டேன்’ என்று நீந்திக்கொண்டே பாடுகிற பாடலும் ‘அ ஆ இ ஈ’ சொல்லிக் கொடுக்கும் ‘அன்று ஊமைப் பெண்ணல்லோ’வும் ‘கொடி அசைந்ததும் காற்று வந்ததா’ என்ற கேள்வி பதில் பாடலும், ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று ம்ம்... ம்ம்ம். ம்ம்ம்ம்’ என்ற பதிலைக்கொண்டும் என கண்ணதாசன், மெல்லிசை மன்னர்கள், சிவாஜி கணேசன் முதலானோரை கூட்டாக வைத்துக்கொண்டு பீம்சிங் செய்ததெல்லாம் தமிழ் சினிமாவின் மகத்தான சாதனைகள்.

பின்னர், ஜெயகாந்தனின் எழுத்துகளையும் எண்ணங்களையும் தன் படைப்பில் கொண்டு வந்தார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட பீம்சிங்கின் படங்கள், இன்றைக்கு கோடம்பாக்கக் கோட்டைக்குள் நுழைபவர்களுக்கான பாடங்கள்.

1924-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இயக்குநர் ஏ.பீம்சிங்கின் பிறந்தநாள். பீம்சிங்கிற்கு இரண்டு மகன்கள். எடிட்டிங்கிலும் இயக்கத்திலும் தனித்துவம் மிக்க ஆளுமையாகத் திகழும் பி.லெனின் ஒருவர். பாரதிராஜாவின் கண்களாகவே திகழ்ந்து, சில வருடங்களுக்கு முன்பு மரணித்த ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் இன்னொருவர்.

பீம்சிங் எனும் இயக்குநர் எப்பேர்ப்பட்ட திறமைசாலி என்பதற்கு ஒரு கொசுறு உதாரணம்...

பீம்சிங்கிடம் சந்திரபாபு ஒரு கதையைச் சொன்னார். ‘அப்துல்லா’ என்பது தலைப்பு. இந்துவாகப் பிறக்கிறான். இஸ்லாமியனாக வளர்கிறான். கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்’ என்றெல்லாம் சொல்லிவிட, ஏவி.எம். நிறுவனமும் கூட்டு சேர்ந்து தயாரிக்க முன்வந்தது.

கதையை தன் குழுவினருடன் அமர்ந்து, டெவலப் செய்தார் பீம்சிங். கதையை பட்டை தீட்ட பட்டை தீட்ட ஜொலித்தது கதை. உடனே செட்டியாரிடம் சென்று, ‘’கதை ரொம்ப நல்லா வந்திருக்கு. ஆனா, இந்தக் கதைக்கு சந்திரபாபு தாங்கமாட்டார். படமும் வேஸ்ட்டாயிரும். சிவாஜியைப் போட்டாத்தான் படம் சரியா இருக்கும்’’ என்று சொன்னார். உடனே ஏவி.எம். செட்டியார், ‘’என்ன சொல்றீங்க பீம்சிங். சந்திரபாபுதான் கதையே எழுதிருக்கார். இப்ப அவர் வேணாம்னா அவர் ஒத்துக்குவாரா?’’ என்று குழம்பிப் போனார்.

‘’நான் சந்திரபாபுகிட்ட சொன்னேன். முழுக்கதையும் கேட்ட சந்திரபாபு, ‘அவர் (சிவாஜி) நடிச்சாத்தான் நல்லாருக்கும்னு சொல்லிட்டார்’’ என்று சொன்ன பீம்சிங், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்களை வைத்துக்கொண்டு ‘பாவ மன்னிப்பு’ படத்தை இயக்கி வெற்றிப்படமாகக் கொடுத்தார்.

சிவாஜி, ஜெமினி, எம்ஜிஆர், பீம்சிங்

பீம்சிங்கின் ஒவ்வொரு படமும் தலைமுறைகள் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. வாழ்ந்துகொண்டேதான் இருக்கும். இன்று பீம்சிங்கிற்கு 98-வது பிறந்தநாள். அவரது நூற்றாண்டுக்கு இன்னும் இரண்டு வருடங்களே இருக்கின்றன.

தமிழ் சினிமாவை வளர்ச்சிப்பாதைக்கு எடுத்துச் சென்று, தமிழ் ரசிகர்களிடம் உறவுகளின் மேன்மையைப் பாடமாகச் சொல்லாமல், படமாக எடுத்து உணர்த்திய பீம்சிங்கை இந்த நாளில் நினைத்துப் போற்றுவோம்.

x