மது போதையில் கார் ஓட்டிய சினிமா இயக்குநர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பிரபுதேவா நடித்த ’குலேபகாவலி’, ஜோதிகா, ரேவதி நடித்த ‘ஜாக்பாட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கல்யாண். இவர் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலைக்கு அருகில் உள்ள சேமியர்ஸ் சாலை சந்திப்பு அருகே தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார் இயக்குநர் கல்யாண் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தவறு என அறிவுரை வழங்கியதுடன் அவரது காரை பறிமுதல் செய்து தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
இன்று காலை ஒரிஜினல் ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு போலீஸார் கூறியதை அடுத்து கல்யாண் வேறொரு வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.