தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் நடிகை பவுலின் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் இறங்கி சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அவரது காதலன் சிராஜுதீன், அவரது நண்பர் பிரபாகரனிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை பவுலின்(எ) தீபா(29). இவர் சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பல்வேறு தமிழ் திரைப்படங்களில் துணை நடிகையாகவும், இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சிராஜுதீன் என்பவரை பவுலின் காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் ஒரு நபரை உயிருக்கு உயிராக காதலித்த வந்தாகவும்,, காதல் கைகூடாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என பவுலின் குறிப்பிட்டிருந்தார்.
அவர் வசித்த வீட்டின் உரிமையாளர் அளித்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார், நடிகை பவுலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை பவுலின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நடிகை பவுலின் எழுதி வைத்த கடிதம் மற்றும் அவரது செல்போன் ஆகியவற்றைக் கைப்பற்றி கோயம்பேடு போலீஸார் சோதனை செய்தனர். இதையடுத்து நடிகை பவுலின் காதலன் சிராஜுதீன், அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக நடிகை பவுலின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் செல்போனில் காதலன் சிராஜுதீனிடம் வாக்குவாதம் செய்து, தற்கொலை செய்து கொள்ளபோவதாக பேசியுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நடிகை பவுலின் குடியிருந்த வீட்டருகே உள்ள சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றியுள்ள கோயம்பேடு போலீஸார், அவரது வீட்டிற்கு யார், யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பவுலின் தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வெளியே சென்று விட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி சோர்வாக வீட்டிற்குள் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் சிராஜுதீன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை பவுலினின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடிவரும் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பவுலின் மரணத்தில் அவரது காதலரின் நண்பர் பிரபாகரன் மீதும் சந்தேகம் இருப்பதால் அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்பட்டுள்ளது. மேலும், நடிகை பவுலின் காதலன் சிராஜுதீன் ஏற்கெனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் பவுலின் அவரை காதலித்து வந்ததும், அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. உண்மையில் பவுலின் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் கோயம்பேடு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.