உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்துவரும் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனை சந்தித்து திரும்பியிருக்கும் நடிகை ஸ்மினு சிஜோ இதுகுறித்து தன், இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த மலையாளிகள், நடிகர் ஸ்ரீனிவாசனா இது என உடைந்து போயுள்ளனர். அந்த அளவிற்கு அதில் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளார்.
மலையாளத்தில் தன் நகைச்சுவை நடிப்பால் மிகவும் பிரபலம் ஆனவர் ஸ்ரீனிவாசன். 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகராக மட்டுமல்லாது சிறந்த திரைக்கதைக்காகவும் இருமுறை கேரள மாநிலத் திரைப்பட விருதைப் பெற்றவர் ஆவார். இவரது திரைக்கதைகள் அனைத்தும் நகைச்சுவையோடு கூடிய சமூகத்தின் நிஜங்களின் அருகே நின்று பேசும். ஸ்ரீனிவாசன் சில படங்களை இயக்கவும், தயாரிக்கவும் செய்துள்ளார்.
அண்மையில் நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் அவர் பெரிதாகப் படங்களில் நடிக்கவில்லை. உடல் ரீதியாக மிகவும் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்துவருகிறார். அண்மையில் மலையாளத் தொலைக்காட்சி ஒன்று, மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான அம்மா அமைப்போடு சேர்ந்து ஓணம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் நீண்ட இடைவெளிக்குப் பின்பு மேடையேறிய ஸ்ரீனிவாசனை, நடிகர் மோகன்லால் கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இப்போது, நடிகர் ஸ்ரீனிவாசனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து இருக்கும் நடிகை ஸ்மினு சிஜோ, “அவருக்கு இப்போது சின்ன, சின்ன உடல் நலப்பிரச்சினைகள் தான் இருக்கின்றன. மறுபடியும் உடல்நல ஆரோக்கியத்தோடு திரைக்கதையிலும் வருவார். அவரது இருமகன்களான வினித், தியான் இருவரது திரைப்பங்களிப்பையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதிலும் தியான் யூடியூப்களுக்குக் கொடுக்கும் நேர்காணல் பற்றியும், அதில் நகைச்சுவையாகக் கையாள்வதையும் குறிப்பிட்டார். ஸ்ரீனிவாசனின் மனைவி விமலா அவரை உடன் இருந்து கவனித்துக்கொள்கிறார்.
தங்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசன் மீண்டும் நடிக்கும் நாளுக்காகக் காத்திருக்கின்றனர் மலையாளிகள்.