நடிகர் யோகிபாபுவின் ‘கான்ஸ்டபிள் நந்தன்’ பூஜையுடன் தொடக்கம்!


நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாது, கதையின் நாயகனாகவும் யோகிபாபு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அறிமுக இயக்குநர் பூபால நடேசன் இயக்கத்தில் உருவாகும் 'கான்ஸ்டபிள் நந்தன்’ படத்தில் கதையின் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர்கள் சுந்தர் சி, சசிகுமார், மு. களஞ்சியம் படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பூபால நடேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருவண்ணாமலை கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. படம் குறித்து இயக்குநர் பூபால நடேசன் பேசுகையில், “நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தயாரிப்பாளர்களைக் கண்டுபிடிப்பது ஒரு வரப்பிரசாதம். அப்படியான சங்கர் சார் என் கதையைத் தயாரிக்க முன்வந்ததற்கு மகிழ்ச்சி. பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தின் விருப்பமான யோகி பாபு சார் போன்ற ஒரு தலைசிறந்த நடிகருடன் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது.

நகைச்சுவை நடிகராக அவரது வாழ்க்கை வெற்றியின் உச்சத்தைத் தொட்டபோது, அவர் தைரியமாக கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் கதாநாயகனாக நடித்தப் பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருக்கிறது. ‘கான்ஸ்டபிள் நந்தன்' திரைப்படமும் அவரது வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக இருக்கும். கதையில் யோகி பாபுவுக்கு எதிரான ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறது. அதில் திறமையான நடிகர் ஒருவரை விரைவில் தேர்ந்தெடுத்து அறிவிப்போம்” என்றார்.

x